இன்னும் 25 நாட்களுக்குள் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் பரிசோதனை ஆய்வகம் சென்னையில் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
உலக வெண்புள்ளிகள் தினமான இன்று, வெண்புள்ளி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023-ம் ஆண்டு வெண்புள்ளி நோய் குறித்து விழிப்புணர்வு பெற்ற முதல் மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் ஏறத்தாழ 7 கோடி பேர் வெண்புள்ளி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பரிசோதனை மையம்
மாதந்தோறும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், டெல்டா பிளஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பரிசோதனை மையங்களை பொருத்தவரை இந்திய அளவில் 14 இடங்களில் மட்டுமே உள்ளது. இந்த பரிசோதனை மையங்கள் அனைத்தும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்தவகையில் அந்த பரிசோதனையை தமிழகத்தில் நடத்துவதற்கு சில அனுமதிகள் வேண்டும். அதற்காக, மத்திய அரசிடம் அந்த அனுமதியை கேட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகத்தில் சென்னையில் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் பரிசோதனை மையத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவு ரூ.2.5 கோடியை தாண்டும். அந்த பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. அந்தவகையில் இன்னும் 25 நாட்களில் பரிசோதனை மையம் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கருப்பு பூஞ்சை
‘டெல்டா பிளஸ்’ வைரஸ் தமிழகத்தில் ஏராளமான பேருக்கு வந்து சென்றிருக்கிலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ‘டெல்டா பிளஸ்’ வைரசால் பாதிப்பு அதிகளவில் இல்லை. தமிழகத்தில் இதுவரை 2,822 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சைக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை டாக்டர் மோகன் தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு முதல்-அமைச்சரிடம் வழங்கி உள்ளனர். கருப்பு பூஞ்சைக்கான உயிரிழப்பு, மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் பாதிக்கு மேல் குறைந்துள்ளது.
தட்டுப்பாடு இல்லாமல் தமிழகத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
Source
- www.dailythanthi.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE